என் வசதிகேற்றவாறு புரிந்துகொண்டதற்கு
மன்னித்துவிடு..
என் வார்த்தைகளை
நான் உதிர்க்காத போதும் புரிந்ததற்கு
நன்றி..
உன் அன்பினை
ஆயுள்வரை கேட்டு அடம்பிடித்தமைக்கு
மன்னித்துவிடு..
என் அன்பினை
கண்ணீர் வெள்ளமாக மாற்றியமைக்கு
நன்றி..
உன் ஆளுமையில்
நானறியாது வசப்பட்டதற்கு
மன்னித்துவிடு..
என் ஆளுமைகளின்
மொத்த வெளியிலும் நீ தெரிவதற்கு
நன்றி..
ஒருமுறை உனக்கு
உச்சபட்ச வலி தந்தமைக்கு
மன்னித்துவிடு..
தினந்தோறும் எனக்கு
வலியின்றி வேறெதுவும் தராமைக்கு
நன்றி..
நிகழ்காலத்தைப் பற்றி
உன்பின்னே அடிதொடர்ந்தமைக்கு
மன்னித்துவிடு..
இறந்தகாலத்தைப் பற்றி
எனதன்பினை ஏற்றுக்கொள்ளாமைக்கு
நன்றி..
உன் இரவுகளில்
அனுமதியின்றி நுழைந்தமைக்காக
மன்னித்துவிடு..
என் இரவுகளை
நீ ஆக்கிரமிப்பு செய்ததற்கு
நன்றி..
உன் இமைகளை
வருடி திறந்தமைக்காக
மன்னித்துவிடு..
என் இமைகளில்
நீ குடியிருப்பதற்கு நன்றி..
என் இதழ்களில்
தவழும் புன்னகையில்
தடுமாறியதற்கு
மன்னித்துவிடு..
என் இதழ்களில்
சிறிதளவேனும் புன்னகை தந்தமைக்கு
நன்றி..
No comments:
Post a Comment