பருவ மழையற்ற ஒரு தருணத்தில்
அந்த விதையை என் நிலத்தில்
விட்டுச் சென்றது
பெயரற்ற பறவையொன்று..
பருவமழை தப்பி பெய்த
மறுநாள் மழையில்
விதை வேர்பிடித்து..
பதினைந்தாம் நாள் திரும்பிய பறவைக்கு
ஆச்சர்யம் கொடுத்தது..
நாளாக ஆக விருட்சமாவதை
கண்கூடாகக் கண்ட பறவை
அதன் வசீகரத்தையும்
அதன் கனிகளையும்
பாராட்டியபடி இருந்தது..
பின்னொருநாள்
சோர்வுடன் திரும்பிய பறவை
அந்த மரத்தை விட்டுப் போவதாக சொல்ல
நிலம் கதறியழுதது..
எதையும் பொருட்படுத்தாத
பெயரற்ற அந்த பறவை
அதற்குப் பின் பகல்வேளைகளில்
வருவதில்லை..
இலைகள் சிறிது சிறிதாக
உதிரத் துவங்கின..
மரம் பட்டுப் போக துவங்கியது..
இன்னும் ஒரே ஒரு இலை மிச்சமிருக்கிறது ..
அந்த பறவையின் வருகைக்காக காற்றிலசைந்தபடி..