வானில் ஒளித்து வைத்து விட்டு
ஏறிட்டுப் பாரென்றேன்
மேகத்தில் மிதந்தாய்..
மழையில் பொதித்து விட்டு
நனையச் சொன்னேன்..
வானவில்லின் வண்ணங்களில்
பிரமித்தாய்..
மண்ணில் புதைத்து விட்டு
தோண்டிப் பாரென்றேன்..
விதையொன்றை ஊன்றினாய்..
ஆலமரத்தின் பொந்தில் அடைத்துவிட்டு
சுற்றிப் பாரென்றேன்
விழுதுகளில் ஊஞ்சலாடினாய்..
இறுதியில்
உள்ளத்திலிருந்து பிடுங்கி
உதடுகளேற்றி
ஒற்றை முத்தமிட்டு நகர்ந்தேன்
பேச்சற்று பின் தொடர்ந்தாய்..
அந்த சாலையில்
இப்போது
நீயும், நானும், முதல் முத்தமும்..
No comments:
Post a Comment