Saturday, May 15, 2010

‘காதல்’ எச்சரிக்கை..


காதல் 
ஒரு மோசமான வியாதி..
ஒவ்வொருவருக்கும்
விதவிதமாய் வந்துவிடும்..

ஒன்றைப் போலானதாய்
இன்னொன்று இருக்காது..
ஆரம்பத்திலேயே
அதன் அறிகுறிகளை 
கண்டறிந்துவிட்டால்
குணமாக்க 
நூறு சதவீதம் வாய்ப்புண்டு..

முற்றவிட்டுவிட்டால்
என்ன செய்தும்
யாராலும் காப்பாற்ற இயலாது..
மருந்திருந்தும் 
குணப்படுத்த இயலாத 
ஒரு மோசமான வியாதி.. 

இந்நோய்க்கான
மருந்து விசித்திரமானது..
ஒவ்வொருவருக்கும்
வேறுபாடானது..

பசி, தூக்கத்தில் 
மாற்றமேற்படுவதே 
முதல் அறிகுறி..
அப்போதே சரி செய்துவிட வேண்டும்..
முற்றிய நிலையில் 
முற்றிலுமாய் 
பசி, தூக்கம், வேலை 
இன்னபிறவற்றையும் 
செயலிழக்கச் செய்யும்.. 

இதற்கென 
தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத 
நிலையில் 
எதிர்பாலரிடம் எச்சரிக்கை உணர்வும்
இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுமே..
தற்போதைய 
தற்காப்பு முறையாக இருக்கிறது..

இதன் மூலம் தண்டோரா போட்டு
சொல்லப்படுவதென்னவென்றால்
காதல் எனும் வியாதி
வராமல் காத்துக் கொள்ளுங்கள்..

அறிகுறிகள் தெரிந்தால்
உடனே அக்கம்பக்கம் சொல்லி
அரற்றாமல்
தானே தீர்வு காணவும் முயலாமல்
தடுப்பூசி தேடி அலையாமல் 
கிள்ளி எறியுங்கள்
சிறு தழும்போடு போய் விடும்..

முற்றிய நிலையில் உடலெங்கும்
உள்ளமெங்கும்
தழும்புகள் மட்டுமே
எஞ்சியிருக்கும்..
எச்சரிக்கை
இது ‘காதல்’ எச்சரிக்கை..
உயிரைப் பறிக்கும் 
‘காதல்’ எச்சரிக்கை.. 

No comments: