Tuesday, March 30, 2010

காதலற்ற உன் இதயத்தில்


மகிழ்வுறுமென் கனவுகளையும்
துயருறுமென் இரவுகளையும்
உனக்கு சொல்வதற்கு பிரியமில்லை..

எனது பெருந்துயரும்
சிறு மகிழ்வும்
என்ன தந்துவிடக் கூடும்
காதலற்ற உன் இதயத்தில்..

உதிரும் கண்ணி


எனது எதிர்பார்ப்பின் 
எல்லைகளைத் தகர்த்தெறியும் 
உனது அலட்சியத்திலென்
நினைவிலிருந்து
ஒவ்வொரு கண்ணியாய்
உதிர துவங்குகிறாய்..

நீளும் பொழுதுகளில் சேமிக்கிறேன்
உதிரும் கண்ணிகளை
மீண்டும் நினைவில் கோர்ப்பதற்கு..

குறுஞ்செய்தி


எதிர்காலம் பற்றிய
எந்தவொரு அச்சமுமற்று
நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட
ஏங்குமென் மனதின் 
அத்துணை துயரங்களையும்
துடைத்தெறிந்து விடுகிறது
கடந்தகாலத்தில் நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள்...

நடைபாதை


பெரும் இரைச்சலுடன்
கடந்து போகும் வாகனப் பொதிகளுக்கு
மத்தியில்
கண்ணீருடன் பயணப்படுமென் 
விழிகளை யாரும் 
கண்டு கொள்ள இயலாதுதான்.. 

சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீரைத் 
தொட்டுத் தொட்டு உலர வைக்கும்
காற்றுக்கு மட்டும் 
என் கண்ணீருக்கான இரகசியம் தெரியும்.. 

யாரிடமும் சொல்லத் தெரியாத 
காரணத்தால் 
காற்றை மட்டும் அனுமதித்திருக்கிறேன்..
என் கண்களுக்கும், கனவுகளுக்குமான
நடைபாதைகளில்..

மாறாதிருக்கட்டும் எதுவும்


ஒரு காலகட்டத்தில் 
நமக்கிடையேயான 
பிரமிப்பு 
நீங்கிப் போகலாம்..
அப்போது நாம் 
பிரியமாயிருப்பதே
பிரமிப்பாயிருக்கலாம்..

ஒரு நேரத்தில் 
நமக்கிடையேயான
ரசனைகள் மாறிப் போகலாம்
அந்நாளில் நமது 
ஒத்த சிந்தனைகளே
ரசனையாகலாம்..

ஒரு பொழுதில்
நமக்கிடையேயான
அத்தனையும் கசந்து போகலாம்..
ஆனபோதும்
முந்தைய தினசரி பதிவுகளே
சர்க்கரையாகலாம்..

எல்லாம் மாறிப் போகட்டும் விலகலில்.. 
மாறாதிருக்கட்டும் எதுவும் நெருக்கத்தில்..

Thursday, March 18, 2010

எழுத்துரு

எழுத்துரு 
பிரச்சினை இன்றி 
வளைந்து கிடக்கும் கொம்புகளையும் 
மாறிப்போயிருக்கும் கால்களையும் 
சரியாகப் பொருத்தி 
புரிந்து படித்து விடுகிறாய்.. 

புரிந்து கொள்ள 
முயற்சிக்கவே  இல்லை
கவிதையிலிருக்கும் 
என் வார்த்தைகளையும் ..
மாறாதிருக்கும் என் நேசத்தையும்.. 

Tuesday, March 16, 2010

கடற்கரையில் உலவும் காதல்


மாதா கோவிலில் இருக்கும்
உன்னை நினைத்தபடி
வெள்ளிக்கிழமை பூஜையில் நான்

பூஜையில் இருக்கும்
என்னை நினைத்தபடி
மாதா கோவிலில் நீ

இரு தெய்வங்களும்
நம்மைப் பற்றி பேசியபடி
உலவுகின்றன
கடற்கரை மணல் வெளியில்

Monday, March 15, 2010

தனிமையின் நிழலில்

தற்கொலை செய்து கொள்ள
அதீத தைரியம்
தேவைப்படுகிறது..

ஒரு நொடி மாற்றத்தைக்
கைப்பற்றிக் கொள்ளும்
அவசரம் தற்கொலைக்கு
முக்கியமானது..

அந்த நிமிடத்தைக்
கடந்து விட்டால்
அது செயலிழந்து போகவும் கூடும்..

தற்கொலைக்கு
ஒற்றை சிறிய காரணம் கூட
போதுமானதாயிருக்கிறது..

தான்தோன்றியாய் அலையும்
தற்கொலைக்கு
தனிமைவாதிகளை மிகவும்
பிடித்துப் போகிறது..

அங்கங்கே
இளைப்பாறும்
தற்கொலை
பதுங்கியிருக்கிறது
தனிமையின் நிழலில்..

Thursday, March 11, 2010

தானியங்கிபடி


நமக்கிடையே ஏற்பட்ட 
ஊடலில்
முதல் தளத்திலேயே 
சில பொருட்களை 
வாங்கிவிட்டு திரும்புகிறோம்.

அருகில் 
தானியங்கிபடி
நகர்ந்து கொண்டேயிருந்தது

முன்னொருமுறை
தானியங்கிபடியில் பயணிக்கையில் 
பயத்தில் உன் கைகோர்த்துக் கொண்டது
நொடிநேரமேயாயினும்
நெஞ்சுக்குள் நிறைந்து கிடந்தது

அந்த நினைவுகளை 
செரித்தபடி 
இருவரும் நகர
ஊடல் வடிந்து கொண்டிருந்தது
வீட்டிற்கு திரும்பும் வழியெங்கும்... 

Wednesday, February 24, 2010

நீயின்றி

நீ தாமதமாய்
திரும்பும் போதெல்லாம்
நான் தூங்கி விட்டேனா
என்றே கவனிக்கிறாய்
உனக்கு புரிவதில்லை
என் இமையே
நீயின்றி
விழியுறங்குவது எப்படியென?

எதிர் வீட்டுக் குழந்தை

எதிர் வீட்டுக் குழந்தை
என்னிடமிருந்து
தினமும்
ஒரு கையசைப்பையும்
ஒரு முத்தத்தையும்
பெற்று விடுகிறது
எந்த ஒரு தயக்கமும்
தடையும் இன்றி
நானும்
எதிர் வீட்டுக் குழந்தையாய்
பிறந்திருக்கலாம்
உனக்கு..

Friday, February 19, 2010

சில விருப்பங்கள்

என் காலுக்கான செருப்பு 
அழகானதா? 
பொருத்தமானதா? 
என்பதை விடவும் 
எனக்கு பிடித்தமனதா? 
என அறியும் உனக்கு 
தெரியாமலா போய் விடும்? 
எனது இன்னும் 
சில விருப்பங்கள் 

நறுமணம்

பரிசோதனை செய்யப்பட 
பல வாசனை திரவியங்களின் 
கலவைகளும் 
இருவரின் கைகளிலும் 
நறுமணம் வீசுகிறது.. 
நேரம் கடந்த பின்னும் 
இனி அதில் மிச்சமிருக்கப் போவது 
உனக்கு என் வாசமும் 
எனக்கு உன் வாசமும்.. 

Wednesday, February 17, 2010

மீட்டெடு

உன் தொடர்பிலிருந்து
துண்டிக்கப்படும் போது
என் பூமியின்
ஈர்ப்புவிசை
ஒழுங்கற்றதாகிறது..

என் கடலின் அலைகள்
கரைகளால்
விழுங்கப்படுகிறது..

என் அமைதியை
சிதறடிக்கிறது
மீட்டெடு
யாவற்றிலுமிருந்து
காத்திருக்கிறேன்
யுகம் யுகமாய்
உன் வருகைக்காக..

காற்றில் கலவாமலே

விலகிச் செல்வதின்
கணம் தாங்காமல்
அலையுறும் மனதின்
ஆற்றாமையைக்
கண்ணுறாமல் நகர்கிறாய்

மீண்டும் வெளியேற
எத்தனிக்கும் சொற்கள்
காற்றில் கலவாமலே
கரைந்து விடுகிறதென்
வெப்பத் தாக்குதலில்

சில சமயங்களில்
குழந்தையென புரண்டழுவதும்
சில சமயங்களில்
கட்டளையிடும் தொனியிலும்
வெளிப்படுமென் சொற்களில்
ஆங்காங்கே தூவியிருக்கிறேன்
உன் மீதான நேசத்தை..

நீயேயறியாத தருணத்தில்
உனக்குள் விழுந்து கிடக்குமது
உன் பார்வையின்
வழி கசிகிறது
நான் எதிர்படுகையில்..

Tuesday, February 16, 2010

அலையும் சுவாசம்

என் சுவாசம் வெளியேறுகிறது
உன்னைத் தேடி
நீ உள்ளே ஒளிந்து கொள்கிறாய்
சுவாசம் உள்ளே நுழைகிறது
நீ வெளியே ஓடி மறைகிறாய்
வெளியேறியும்
உள்ளிறங்கியும்
அலையும் சுவாசம்
உன்னைக் காண இயலாமல்
திரும்புகிறது
தன் கூட்டிற்கு
வெற்றுடம்புடன்...

இரவுகளைத் தவிர.

காதலர் தினத்தில்
உனக்கு பரிசளிக்க
என்னிடம் யாதுமில்லை
என் இரவுகளைத் தவிர..

துணை

கடற்கரையிலிருந்து
கடைசியாக வெளியேறிய நம்மை
வழிமறித்த அலை கெஞ்சியது..
அடுத்த அலை வரும் வரை
துணையிருக்கச் சொல்லி..
அலைக்குத் துணையாக
பேசியபடியிருந்தபோதில்
நமக்கு துணையாக
வந்தமர்ந்தது
காதல்...

Saturday, February 13, 2010

வரம்


உன் மடியில் 
மரணிக்கும் 
வரம் தருவாய்
உன் விழிகளில் 
வாழ்கிற 
வரமின்றி போனாலும்..

Thursday, February 11, 2010

பலம்

என் பலமெல்லாம்
நீயாயிருக்க
எனக்கு அவசியமில்லை
பிற பலமும்
பிரபலமும்