
உன்னிடம்
எனக்கிருக்கும்
நேசத்தை
எப்போது உணர்ந்தேன்?
இரவுகளில்
தனிமையைத் தின்று தீர்க்க
ஆரம்பித்தாயே அப்போதா?
இதயத்தின் துயரங்களை
சுமக்க சம்மதித்தாயே
அப்போதா?
அருகருகே செல்கையில்
ஸ்பரிசித்துக் கொண்டோமே
அப்போதா?
கால்டுவெல் முதல் தஸ்தாவெஸ்கி வரை
மணிக்கணக்கில்
பரிமாறிக் கொண்டோமே அப்போதா?
நமக்கிடையேயான
முரண்பாடுகளிலும்
உடன்பட்டு பயணிக்கத்
தலைப்பட்டோமே அப்போதா?
இவையாவுமாகவும் இருக்கலாம்..
இதற்கும் மேலாக
முதன்முதலில்
உன்னைச் சந்தித்த
கணமிருக்கிறதே
அப்போதுதானிருக்கும்.