Saturday, May 15, 2010

கவிதை


நாம் சந்திப்புகளை
நொடி நொடியாய்
நினைவுபடுத்த 
நம்மைத் தவிரவும்
ஒன்றிருக்கிறது..
வேறெது?
இந்த கவிதைகள்தான்!

சிறு அசைவுகள்


உன்னைப் பற்றிய 
கவிதைகளை வாசிக்கும் போது
உன் கண்களிலும்
உதடுகளிலும்
தெறிக்கும் 
சிறு அசைவுகள்
சொல்லிவிடக் கூடும்
என் மீதான காதலை.. 

நேசத்தின் கையளிப்பு


ஒரு காலைப் பொழுதில்
கதவிடுக்கில்
விரல்பட்டு நசுங்கியதாக
நீயும்
குளிக்கும் போது
எனது நகத்தாலான பெருங்கீறலை
நானும்
சொல்லிக் கொண்டோம்..
பின்னர் வந்த நாட்களில்
அது பற்றிய விசாரிப்புகள்
கடந்த பின்னும் 
எஞ்சியிருக்கும் தழும்புகள்
நினைவுபடுத்துகின்றன
நேசத்தின் கையளிப்புகளை..

தேவதை


சில சமயம் தேவதையாகவும்
பல சமயம் இராட்சசியாகவும்
உருமாற்றும்
மந்திரவித்தை
நள்ளிரவில் 
மொட்டைமடியில் 
நிலவைப் பார்த்தபடி
பேசும் உன் குரலுக்கு உண்டு..

சாத்தியம்


சாத்தியமற்றவைகளை
சாத்தியப்படுத்தவும்
சாத்தியமானவைகளை
சாத்தியமற்றதாக்கவும்
காதலுக்கு 
யார் தான் கற்றுத் தந்ததோ?

சமாதி


சம்மதம்
கேட்ட பிறகுதான்
காதலிக்க வேண்டுமென்றால் 
காதல்
என்றைக்கோ
சமாதியாயிருக்கும்.. 

கடல்..


ஒரே அலையில் 
என்னை நனைத்தது கடல்..
ஒவ்வொரு முறையும்
உன்னை நனைக்காமல்
திரும்பிச் செல்கிறது..
கடலுக்குத்
தெரிந்திருக்கிறதென் மனது
நீ என் காதலில்தான் 
நனைய வேண்டுமென.. 

சொற்களில் முட்களேந்தி..

அடிக்கடி திட்ட செய்து 
திட்டும்போதெல்லாம் புன்னகைத்து 
படக்கென கோபமூட்டி 
கோபத்தில் மௌனித்து 
திடீரென மகிழ்ச்சி தந்து 
திட்டமின்றி தீண்டல் நிகழ்த்தி 
மனசு முழுக்க 
மலர் பரப்பிக் கிடக்கிறாய்..
சொற்களில் மட்டும் 
முட்களேந்தி..

இருளை இழுத்துப் போர்த்தியபடி..


காதுக்குள் இசை வழிந்திருக்க 
கண்களில் கனவுகள் கசிந்திருக்க 
நிகழ்காலத்தில் வருங்காலம் வடிந்திருக்க 
மெல்ல இருள் முடிந்து விடிந்திருக்க 
அக்கணத்தில் உன் வருகை நிகழ்ந்தது 
அனைத்தையும் துடைத்துவிட்டு 
அடைக்கலமாகிறேன்   உன் வெப்பத்திற்குள்
இருளை இழுத்துப் போர்த்தியபடி.. 

யாவற்றுக்குமிடையில்

வாய்த்திருக்கும் இப்பிறவியில் 
வாய்த்திருக்கும் ஒரு வாழ்க்கையில் 
வாய்த்திருக்கும் சந்தர்ப்பத்தில் 
வாய்த்திருக்கும் முழு நேசத்தில் 
வாய்த்திருக்கும் மிச்ச ஆயுளில் 
வாழ்ந்துவிட துடிக்கிறேன் 
வாய் திறந்தே வதைக்கிறாய்..
மௌனத்தாலும் உதைக்கிறாய்
புன்னகைத்தே சிதைக்கிறாய் 
மரணக்குழியில் புதைக்கிறாய்
யாவற்றுக்குமிடையில் 
கொஞ்சம் நேசத்தையும் 
விதைக்கிறாய்.. 

கடிபட்ட இரவு


பாம்பிடம் கடிபட்ட இரவு 
தூங்காமலே 
கழிய வேண்டுமென்பதாய் 
உன்னிடம் 
கடிபட்ட என் சிந்தனை 
ஒவ்வோர் இரவும் 
தூங்காமலே திரிகின்றது..

நினைக்கும் தோறும்..


கவனத்தின் போதாமையாலும் 
கயவர்களின் திருட்டு தனத்தாலும் 
செல்லைத் தொலைத்து விட்டு 
எண்கள் தொலைந்து போனதற்காகவும் 
வீட்டில் திட்டு வாங்க வேண்டியிருக்குமெனவும் 
குற்றுணர்வின் விளிம்பு நிலையிலும் 
பதறும் மனதின் துடிப்பிற்கு மத்தியில் 
காதலாலானவனுக்கு 
நேசத்திலும் கோபத்திலும் 
பெறப்பட்ட 
காதலியின் 
மீட்க முடியாக குறுஞ்செய்திகள் 
பற்றிய சிந்தனை 
வதைத்தெடுக்கும்
நினைக்கும் தோறும்.. 

கற்பூரமாய்


சொல்வதற்கு ஏதுமில்லை
செல்வதற்கும் பாதையில்லை
காற்றில் கரைகிறேன்
கற்பூரமாய்
உன் புன்னகையின்
வாசமேந்தி.. 

பெரிதினும் பெரிது


பெரிதினும் பெரிது கேட்க 
ஆசையாகத் தானிருக்கிறது..
சிறிதினும் சிறிது கிடைக்கவே
போராட வேண்டியிருப்பதால்
சிறிது கிடைத்தாலே
பெரிதெனெ மகிழ
பழக்கப்பட்டுவிட்டது
பழக்கங்களுக்கு அடிமையான
மனம்.

முரண்களும், உடன்களும்


முரண்களைத் தீர்த்துவிடுவதால்
யாது பயனுமில்லை..
உடன்பாடுகள் மட்டுமே
உறவுக்கானதல்ல..
முரண்களும் கூடத்தான்..
முரணை அழித்துவிடுவதால்
அதன் சமன் பாதிக்கப்படும்
சேர்ந்தே இருக்கட்டும்
முரண்களும், உடன்களும்
என்னையும் உன்னையும் போல்..

குறுஞ்செய்தி


என் தனிமையை 
தின்று தீர்க்க 
நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள்
நிரம்பி வழிகிறது
என் அலைபேசியில்.. 
பசியூட்டும் 
அட்சயப்பாத்திரமாய்..

காயங்கள்


நேற்றைய காயங்கள் வேண்டாம்
நாளைய மாயங்கள் வேண்டாம்
இன்றைய சாயங்களே போதும்
கொஞ்சம் வண்ணங்களோடு
வாழ்ந்திருக்க..

விளக்கம்


அடிக்கடி
விளக்கம் சொல்ல
காதலொன்றும் மறைபொருளல்ல..
உணரத்தான் கூடும்
அதன் பிசிபிசுப்பையும்
வழவழப்பையும்..

வாழப்பிரியப்படும் ஏக்கம்..


என் இரவுகளில் கரைந்துருகி 
பகல்களின் சாலைகளில் 
வழிந்தோடுமென் நேசத்தை
காலத்தின் கைப்பையிலிருந்து 
மீட்டுவிடும் முயற்சியில்
தோற்பதே வாடிக்கையாயிருக்கிறது..
என்றேனும் வெற்றிகிட்டிவிடுமென
நம்பிக்கையின் ஒளிக்கீற்றில் 
ஓடிக் கொண்டிருக்கிறதென் நேசம் 
வாகனங்களில் அடிபட்டுவிடாத 
எச்சரிக்கையுடனும்..
வாழப்பிரியப்படும் ஏக்கத்துடனும்..

வெற்றி தோல்வி..

என் தூக்கத்தை

கனவுகள் கைப்பற்றுகின்றன..
கனவுகளில் 
விருப்பும். வெறுப்புமுள்ள
அறிமுகமற்ற, அறிமுகமுள்ள
சில பேர்
தன் விருப்பம் போல் உலவுகின்றனர்..

அவர்களை விரட்டும் முயற்சியில்
வெற்றி தோல்வி காணுமுன்
அதிகாலை வந்து விடுகிறது..

சில நாட்களுக்குப் பின் 
முடிவொன்றைக் கைக்கொண்டேன்
‘பழிக்குப்பழி வாங்க‘ 
என் கனவுகளில் துரத்தியவர்களின் 
கனவுகளில் நுழைந்து
தாக்கலாமெனத் திட்டமிட்டேன்

சொல்லிவைத்தாற்போல்
அத்தனைபேர் கனவிலும்
அவரவர் உருவங்களே
உலவிக் கொண்டிருந்தது..

உடனடியாகத் திரும்பி
என் கனவில் புகுந்து 
உற்றுக் கவனித்தேன்
என் நிழலையொத்த
உருவங்கள் நிழலாடின..

பரிச்சயமற்ற சாலையோரங்களில்


எல்லாவற்றையும் 
சொல்லிவிட்டால்
பின் எதைத்தான் 
உள்ளிருத்தி வைப்பது?

எல்லாவற்றையும் 
கேட்டுவிட்டால்
பின் என்னதானிருக்கும்
சொல்வதற்கு?

தேவையானதை கேட்டும், சொல்லியும்
அனாவசியத்தை விட்டும், விலகியும்
நடக்கலாம்..

பரிச்சயமற்ற சாலையோரங்களில்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
மஞ்சள் நிறப்பூக்களையும்
கோடை வெயிலை மறைத்து நிற்கும்
வெண்மேகத்தையும்
தந்து செல்லும் 
புரிதலினூடாகும் நம் வாழ்க்கை..

தொடர்பு எல்லைக்கு வெளியே



தனியறையில் 
நிகழ்ந்த 
அந்த துயர சம்பவத்தை
அக்கணமே
யாரிடமாவது 
சொல்ல வேண்டுமென துடித்து
உள்ளூர் தோழியொருத்திக்கு
எண்ணழுத்தினேன்..

தொடர்பு எல்லைக்கு
வெளியேயிருப்பதாக சொல்லியது
பதிவு செய்யப்பட்ட குரல்..

அடுத்து
நெடுந்தொலைவிலிருக்கும் 
தோழிக்கு அழைக்க 
மாதக் கூட்டத்திலிருப்பதாகச் சொல்லி 
அழைப்பைத் துண்டித்தால்..

என்னவனுக்கு 
தொடர்புகொள்ள
அழைப்பு முழுமையாய் சென்று
நின்றுவிட்டது.. 

வேறுதுவும் 
செய்யத் தோன்றாமல்
வலிகளையெல்லாம்
முடிந்தவரை வார்த்தைகளாக்கி
வடித்து விட்டு
கவிழ்ந்து படுத்தேன்..

ஒற்றை இறகு


அடிபட்டோ
நோயுற்றோ
சிகிச்சைக்காகக்
கொண்டுவரப்படும்
பறவைகளுக்கான மருத்துவமனையில் 
வலிகொண்ட ஒற்றை இறகையும்
சுமக்க இயலாமல் 
வரிசையில் தடுமாறி நிற்கிறேன்..

குடிநீரும், உணவும்
தந்து செல்லும்
அந்த மூதாட்டியின்
கண்களில் தெறிக்கும் அன்பில்
வலிகளை ஒப்புக் கொடுக்கிறேன்..

ஒட்ட வைக்க இயலா
ஒற்றை இறகும்
உதிர்ந்தபின் 
நீச்சல் கற்க துவங்குகிறேன்.. 
கடலடியில் 
எனக்கான 
புது உலகை நிறுவுவதற்காக!

நமது நிழல்கள்..


நீயும் நானும்
எங்கே நின்று கொண்டிருக்கிறோம் 
என்பதை
புரிந்து கொள்ளக் கூடியது..
இந்த இரவில் நாம் பேசும் 
வார்த்தைகள் என்கிறாய்..

நீ எனக்குள்ளும்
நான் உனக்குள்ளும்
இருப்பதை மறைத்துக்
கொண்டு பேசுவதை
கேலி செய்கின்றன
நமது நிழல்கள்..

பேராண்மை


நீ 
வெட்டியெறிந்த நேசத்தை
கையிலேந்தியபடி
நெடுஞ்சாலையோரத்தில்
மயங்கிக் கிடக்கிறேன்..

கண்டுகொள்ளப்படாத 
எனது நேசமும்
தேற்றுவாரின்றி
தலைவிரிகோலமாய்
புரண்டழுகிறது..

குற்றுயிராய்
கிடக்கும் அதற்கு 
இறுதிச் சடங்குகள் 
செய்யவேனும் 
வந்துவிடு..
உனது பேராண்மைமிக்க 
பிடிவாதத்தை விட்டுவிட்டு..

நீயுரைத்த சொற்கள்..

நெடுந்தொலைவுக்கு 
துரத்தியடிக்கிறது..
உனது மௌனத்தை 
உடைத்து 
நீயுரைத்த சொற்கள்..

உனது பொய்மைகளின் 
பின்னே இருக்கும் 
உண்மைகளின்
பிம்பத்தை அறிந்திருக்கிறேன்..

ஏதோ ஒன்றிற்காக
ஏதோ ஒன்றைச் சொல்லி
நழுவுகிறாய்..

யாதொரு வழியும் 
புலப்படாமல் 
உனது நிழலைச் சுற்றியே
பின்னிக் கிடக்கிறேன்..

அழிவுறா எழுத்து


சிதைவுற்ற பொழுதுகளை
சீராக்கியும்
மங்கிப் போன கனவுகளுக்கு 
ஒளியேற்றியும்
வெறிச்சோடியிருந்தயென் பூமியில் 
விதையூன்றியும்
மேகங்களைத் திரட்டி
மழைபொழிந்தும்
பசுமை நிறைத்த உன் நேசத்திற்கு
எதைக் கொடுத்து ஈடாக்குவேன்?
அழிவுறா எழுத்துக்களில்
உன்னை வாழவைப்பதை தவிர.. 

ஒற்றை வார்த்தை


நீ
முன்னர் உதிர்த்த 
ஒற்றை வார்த்தையின் 
கைப்பிடித்து 
நெடுந்தூரம் வந்துவிட்டேன்..

இது ஒருவழிப்பாதைதான்
உடன் நீயும் வரலாம்
திரும்ப இயலாது..

மறந்துவிடாதே
திரும்பப் பெற்றுக் கொள்ள
வார்த்தைகள்
வெறும் பொருளல்ல.. 

நீயும், நானும், முதல் முத்தமும்..


உன் மீதான நேசத்தை
வானில் ஒளித்து வைத்து விட்டு 
ஏறிட்டுப் பாரென்றேன்
மேகத்தில் மிதந்தாய்..

மழையில் பொதித்து விட்டு
நனையச் சொன்னேன்..
வானவில்லின் வண்ணங்களில்
பிரமித்தாய்..

மண்ணில் புதைத்து விட்டு
தோண்டிப் பாரென்றேன்..
விதையொன்றை ஊன்றினாய்..

ஆலமரத்தின் பொந்தில் அடைத்துவிட்டு
சுற்றிப் பாரென்றேன்
விழுதுகளில் ஊஞ்சலாடினாய்..

இறுதியில் 
உள்ளத்திலிருந்து பிடுங்கி
உதடுகளேற்றி
ஒற்றை முத்தமிட்டு நகர்ந்தேன்
பேச்சற்று பின் தொடர்ந்தாய்..
அந்த சாலையில் 
இப்போது 
நீயும், நானும், முதல் முத்தமும்..

இனிமையானவன்.


இதயத்தில் 
யாரோ ஓங்கி
அறைவது போலான வலி
அழுது தீர்க்கிறேன்
உருண்டு புரளுகிறேன்..

இரத்தம் சொட்ட சொட்ட 
சிறிது நேரத்தில் 
வலி குறைந்து தூங்கிப் போகிறேன்..
காலையில் என்னைச் சுற்றி 
மொய்த்துக் கிடந்தன எறும்புகள்..

என் கண்ணீருக்கு காரணமானவன் 
இனிமையானவன்.

வலி


இந்த வலி 
பரிச்சயமானதல்ல..
முன்பின் கண்டறியாத
அதன் செய்கைகள்
ஒரு செயலையும் செய்யவிடாமல்
பசியுறக்கம் மறக்கச் செய்து
கட்டுண்டு கிடக்கச் செய்கிறது
கட்டற்றும் அலைய வைக்கிறது..
பிறர் சொல்லியும் புரியாத 
இந்த வலியை
அனுபவிப்பதில் 
அனுகூலமுமுண்டு..
வலியின் அறிமுகம் ஒருவேளை
உண்மையை பறைசாற்றலாம்.. 

நம்பிக்கை


வசீகரிக்கவும்
நெருங்கி அன்பு செய்யவுமான
எனக்கான சாத்தியங்களை
ஒளித்து வைக்கப் போவதில்லை..

எப்போதும் போலான 
அல்லது 
அதைவிட இன்னும்
மேலானவற்றை 
உருவாக்க முயல்கிறேன்..

‘நம்பிக்கை’ எனும் வார்த்தைக்கு
உயிர் கொடுக்கும் சிலரில் 
நானும் இருந்துவிட்டு போகிறேன்.. 

ஆட்டம்


மைதானத்திலிருந்து
ஆட்டமிழந்து வெளியேறும்
வீரனுக்கும்..
நேசத்திலிருந்து வலியுடன் 
திரும்பும் மனதுக்கும்
பெரிய வித்தியாசம் 
ஒன்றுமில்லை..

மைதானமும், நேசமும்
மாறப்போவதில்லை..
வீரனும், மனமும்
விளையாடுவதை
நிறுத்தப் போவதில்லை..

மைதானம்
நேசம்
வாழ்க்கை
அனைத்தும் வட்டமானது..
விட்ட இடத்திலிருந்து
ஆட்டம் துவங்கும்..

ஆரத்தி


அத்துணை ஆக்கத்திற்கும்
காரணமாயிருந்த நீயே
ஆரத்திஎடுத்தாய் 


அதன் அழிவிற்கும்

கண் ரேகை

சாவி கொடுத்த பொம்மையை 
போலத்தான் ஆகிவிட்டது..
எனது நிலை..
உன் கண் ரேகையை 
என்னில் 
பதித்து சென்ற 
முதல் நாளிலிருந்து..

சிலிர்ப்பு


கோடை வெப்பத்தின் இரவில்
சிறு தூரலில் கமழ்ந்து வரும்
மண்வாசனையைப் போலானது
உன்னுடைய நேசம் 
சிலிர்ப்பும்
சிலாகிப்புமாய்.

கண்ணீரும் புன்னகையும்


எவ்வளவோ விலகியிருந்து
நேசித்தும்
எவ்வளவோ அருகிருந்து
சண்டையிட்டும் 
ஆகிவிட்டது
இனி ஏது நிகழ்ந்தென்ன? 
கண்ணீரும் புன்னகையும் 
கைகோர்த்தே பயணிக்கையில்.. 

கண்ணீர்த்துளிகள்


அவசியமற்றதாக இருக்கிறது
நேற்று நள்ளிரவிலிருந்து
இன்று அதிகாலை வரை 
தூறும் மழை..
எனது பேச்சினைப் போல்..
வாசனையோடு
வெப்பத்தையும் 
வெளிக்கிளப்பிய மழைக்கு
எப்படி தெரியப் போகிறது?
மழையோடு போட்டி போடுமென் 
கண்ணீர்த்துளிகள்.. 

காட்சிப் பிழையாய்


காட்சிப் பிழையாய் 
நகருமென் கணங்களில் 
சரியாய் பொருந்தியிருக்கிறாய்..

எங்கெங்கு காணினும் 
நீயே தோன்றுகிறாய்..

குறைந்த தூர, நீண்ட தூர பயணத்தில்
பேருந்திற்காக காத்திருக்கையில்
பேருந்தில் ஜன்னலோரத்தில் தலைசாய்க்கையில்
எங்கேனும் மண்வாசம் உணருகையில்

திடீரென மழை நனைக்கையில்
கொளுத்தும் வெயிலில் மரநிழல் எதிர்ப்படுகையில்
முடியைக் கலைக்கும் ஜன்னல் காற்றில்
குழந்தைகளுடன் குதூகலிக்கையில்

சொந்தங்கள் பலவும் பேசுகையில்
நண்பனின் திருமணத்தில்
தூரத்து உறவினரின் இரங்கலில்
பாட்டியென் கைபற்றி பேசிய கணங்களில்

பசி வயிற்றைக் கிள்ளியெறியும் போதில்
வயிறு நிரம்பியிருக்கும் வேளைகளில்
அலுவலக வேலை நேரங்களில்
அமைதியை நாடும் தனிமையில்

மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்கையில்
அதுனூடாக இரகசிய வார்த்தைகளை இடுகையில்
மெல்லிசையில் மனம் லயிக்கையில்
குறுஞ்செய்தி வருகயில் எழும் ஒலியில்

தொலைபேசி அழைப்பு வருகையில்
சிக்னலில் பரபரக்கையில்
படுக்கையில் ஓய்வெடுக்கையில்
நாளிதழ்கள் வாசிக்கையில்

கவிதைகள் படிக்கையில் 
கனவுகளை நினைக்கையில்
எண்ணங்களை சொல்கையில்
ஏக்கங்கள் எழுதுகையில்
துயரம் மேலிட அழுகையில் 

மகிழ்ச்சி எட்டிப்பார்க்கையில்
படுவேகத்தில் நிதானிக்கையில்
ரசனை மிகுகையில்
காலை எழுமுன் உருண்டு புரள்கையில்

இரவு நித்திரையில் வீழ்கையில்
இதயம் துடிக்கும் தோறும்
இமைகள் மூடியிருக்கும் போதும்
வாழ்தலின் தூண்டுதலிலும்

மரணத்தின் விளிம்பிலும்
எங்கெங்கு காணினும்
காட்சிப் பிழையாய்
சரியாய் பொருந்தியிருக்கிறாய்!

வரம் தருவாய் தேவதையே..


வாரம் ஒருமுறை மட்டும் 
பார்க்கும் அவன் 
பிடிவாதத்திற்கேனும் 
இந்த நாட்களெல்லாம்
வாரங்களாகும் 
வரம் தருவாய் தேவதையே..

Saturday, April 10, 2010

குளிரூட்டும் வார்த்தை


புண்படுத்துமென்று
தெரிந்தே
நீ வீசும்
நெருப்பு வார்த்தைகளை
எந்தவித கவசமுமின்றி
எதிர்கொள்கிறேன்..

பின்பு நீயே
குளிரூட்டும் வார்த்தைகளைக்
காயத்திற்கு
மருந்தாக தரலாம்
என்பதால்.

Tuesday, March 30, 2010

காதலற்ற உன் இதயத்தில்


மகிழ்வுறுமென் கனவுகளையும்
துயருறுமென் இரவுகளையும்
உனக்கு சொல்வதற்கு பிரியமில்லை..

எனது பெருந்துயரும்
சிறு மகிழ்வும்
என்ன தந்துவிடக் கூடும்
காதலற்ற உன் இதயத்தில்..

உதிரும் கண்ணி


எனது எதிர்பார்ப்பின் 
எல்லைகளைத் தகர்த்தெறியும் 
உனது அலட்சியத்திலென்
நினைவிலிருந்து
ஒவ்வொரு கண்ணியாய்
உதிர துவங்குகிறாய்..

நீளும் பொழுதுகளில் சேமிக்கிறேன்
உதிரும் கண்ணிகளை
மீண்டும் நினைவில் கோர்ப்பதற்கு..

குறுஞ்செய்தி


எதிர்காலம் பற்றிய
எந்தவொரு அச்சமுமற்று
நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட
ஏங்குமென் மனதின் 
அத்துணை துயரங்களையும்
துடைத்தெறிந்து விடுகிறது
கடந்தகாலத்தில் நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள்...

நடைபாதை


பெரும் இரைச்சலுடன்
கடந்து போகும் வாகனப் பொதிகளுக்கு
மத்தியில்
கண்ணீருடன் பயணப்படுமென் 
விழிகளை யாரும் 
கண்டு கொள்ள இயலாதுதான்.. 

சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீரைத் 
தொட்டுத் தொட்டு உலர வைக்கும்
காற்றுக்கு மட்டும் 
என் கண்ணீருக்கான இரகசியம் தெரியும்.. 

யாரிடமும் சொல்லத் தெரியாத 
காரணத்தால் 
காற்றை மட்டும் அனுமதித்திருக்கிறேன்..
என் கண்களுக்கும், கனவுகளுக்குமான
நடைபாதைகளில்..

மாறாதிருக்கட்டும் எதுவும்


ஒரு காலகட்டத்தில் 
நமக்கிடையேயான 
பிரமிப்பு 
நீங்கிப் போகலாம்..
அப்போது நாம் 
பிரியமாயிருப்பதே
பிரமிப்பாயிருக்கலாம்..

ஒரு நேரத்தில் 
நமக்கிடையேயான
ரசனைகள் மாறிப் போகலாம்
அந்நாளில் நமது 
ஒத்த சிந்தனைகளே
ரசனையாகலாம்..

ஒரு பொழுதில்
நமக்கிடையேயான
அத்தனையும் கசந்து போகலாம்..
ஆனபோதும்
முந்தைய தினசரி பதிவுகளே
சர்க்கரையாகலாம்..

எல்லாம் மாறிப் போகட்டும் விலகலில்.. 
மாறாதிருக்கட்டும் எதுவும் நெருக்கத்தில்..

Thursday, March 18, 2010

எழுத்துரு

எழுத்துரு 
பிரச்சினை இன்றி 
வளைந்து கிடக்கும் கொம்புகளையும் 
மாறிப்போயிருக்கும் கால்களையும் 
சரியாகப் பொருத்தி 
புரிந்து படித்து விடுகிறாய்.. 

புரிந்து கொள்ள 
முயற்சிக்கவே  இல்லை
கவிதையிலிருக்கும் 
என் வார்த்தைகளையும் ..
மாறாதிருக்கும் என் நேசத்தையும்.. 

Tuesday, March 16, 2010

கடற்கரையில் உலவும் காதல்


மாதா கோவிலில் இருக்கும்
உன்னை நினைத்தபடி
வெள்ளிக்கிழமை பூஜையில் நான்

பூஜையில் இருக்கும்
என்னை நினைத்தபடி
மாதா கோவிலில் நீ

இரு தெய்வங்களும்
நம்மைப் பற்றி பேசியபடி
உலவுகின்றன
கடற்கரை மணல் வெளியில்

Monday, March 15, 2010

தனிமையின் நிழலில்

தற்கொலை செய்து கொள்ள
அதீத தைரியம்
தேவைப்படுகிறது..

ஒரு நொடி மாற்றத்தைக்
கைப்பற்றிக் கொள்ளும்
அவசரம் தற்கொலைக்கு
முக்கியமானது..

அந்த நிமிடத்தைக்
கடந்து விட்டால்
அது செயலிழந்து போகவும் கூடும்..

தற்கொலைக்கு
ஒற்றை சிறிய காரணம் கூட
போதுமானதாயிருக்கிறது..

தான்தோன்றியாய் அலையும்
தற்கொலைக்கு
தனிமைவாதிகளை மிகவும்
பிடித்துப் போகிறது..

அங்கங்கே
இளைப்பாறும்
தற்கொலை
பதுங்கியிருக்கிறது
தனிமையின் நிழலில்..

Thursday, March 11, 2010

தானியங்கிபடி


நமக்கிடையே ஏற்பட்ட 
ஊடலில்
முதல் தளத்திலேயே 
சில பொருட்களை 
வாங்கிவிட்டு திரும்புகிறோம்.

அருகில் 
தானியங்கிபடி
நகர்ந்து கொண்டேயிருந்தது

முன்னொருமுறை
தானியங்கிபடியில் பயணிக்கையில் 
பயத்தில் உன் கைகோர்த்துக் கொண்டது
நொடிநேரமேயாயினும்
நெஞ்சுக்குள் நிறைந்து கிடந்தது

அந்த நினைவுகளை 
செரித்தபடி 
இருவரும் நகர
ஊடல் வடிந்து கொண்டிருந்தது
வீட்டிற்கு திரும்பும் வழியெங்கும்...